Tuesday, December 22, 2009

பதிவர்களின் கடமைகளும் பொறுப்புகளும்


ஈரோடு வலைப்பதிவர் கூட்டம் இனிதே நடந்தேறியது. அனைவரும் சிறப்பாக தங்களது பங்களிப்பை வெளிப்படுத்தினர். சுமார் 70 பேர் கலந்து கொண்டு பெரியார் பிறந்த மண்ணுக்கு பெறுமை சேர்த்தனர். கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் சிறப்பாக பேசினர்.


திருவாளர்கள் புலவர் இராசு,தமிழ்மணம் காசி,ஆரூரான், பழமை பேசி, செந்தில் பக்கங்கள் ஆகியோரின் பேச்சு என்னை வெகுவாகக் கவர்ந்தது.

மிகச்சிறப்பாக இந்த விழா நடைபெற்றதற்கு காரணம். கதிர் மற்றும் ஈரோடு வாழ் நண்பர்களின் அயராத உழைப்பே காரணம்.


விழாவிலே பதிவர்களின் கடமைகளும் பொறுப்புகளும்
குறித்து நான் பேசியது.   உங்களுக்காக இங்கே ...



சமுதாயத்தில் வாழும் ஒரு மனிதன் நன்நெறியில் செல்வதற்கும், அதிலிருந்து விலகுவதற்கும் இரண்டு காரணிகள் உண்டு. ஒன்று மரபு மற்றொன்று சூழ்நிலை


1. மரபு என்பது பெற்றோர் மற்றும் மூதாதையர்களின் பண்பும் குணநலன்களும் கரு மூலமாக ஒரு மனிதனுக்கு வருவது. இது பிறக்கும் போதே முடிவாகி விடுவதால் இதில் நாம் எந்த மாற்றத்தையும் செய்வதற்கில்லை.


2. சூழ்நிலை என்பது பெற்றோரின் வளர்ப்பு முறை, ஆசிரியரின் வழிகாட்டுதல், தொலைக்காட்சி, பத்திரிக்கைகள் இந்த வரிசையில் இப்பொழுது வலைதளம் என்பதும் வருகிறது.


ஒரு தனிமனிதனுக்கும் அதன் மூலம் ஒரு சமுதாயத்திற்கும் நன்மை பயக்கும் விதத்தில் கருத்துக்களை வெளியிடும் மகத்தான சக்தி வாய்ந்த கருவி நம் கையில் இருக்கிறது. வெளியிட்ட ஒரு சில வினாடிகளில் உலகின் எந்த மூலைக்கும் செல்லும் அற்புத ஆற்றல் வாய்ந்தது வலைதளம்.


இதில் பொழுது போக்கு அம்சங்கள் இருக்கலாம். ஆனால் பொழுது போக்கு அம்சங்களுக்காக மட்டுமே இதை பயன்படுத்துவதை தவிர்த்து. ஆக்கபூர்வமான சிந்தனையையும் படைப்போம். சமூக அவலங்களை சுட்டிக்காட்டுவதும் சமூக முன்னேற்றத்திற்கு உதவும் விசயங்களை இனங்கண்டு பாராட்டுவதும் நமது கடமையாகும். ஆரூரான் ஐயா வலிவுள்ளதே எஞ்சும் என்று சொன்னது போல், வலிவுள்ள பதிவுகளே காலத்தால் அழியாமல் நிற்கும்.

படைப்புத்திறன் உள்ள பல பேர்கள் வலைதளம் ஆரம்பிக்க தெரியாமல் இருக்கின்றனர். பல்வேறு சமூக விழாக்களில் கலந்து கொள்பவர்கள், இது குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தலாம்.


ஈரோடு வலைப்பதிவர் கூட்டம் குறித்த முழுமையான விபரத்திற்கு இங்கே சொடுக்குங்கள்.

பழமை பேசி பக்கம்  , ஈரோடு கதிர் பக்கம்


விழா குறித்த படங்களுக்கு இங்கே சொடுக்குங்கள்



.

Thursday, December 17, 2009

இந்தியாவின் உயிர் மூச்சு

நூறு கோடி இந்தியர்களின் கனவு, கங்கை காவிரி இணைப்பு. வேண்டாம் கங்கையை காவிரியோடு இணைக்க வேண்டாம். மகா நதியிலிருந்து வீணாகக் கடலில் கலக்கும் நீரையாவது காவிரி,வைகை, தாமிர பரணியோடு இணைக்கலாமே. பல லட்சம் இந்தியர்கள் இன்னும் ஒரு வேளைச் சோறு மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த பிரச்னைக்கு முதலில் தீர்வு காணாமல் நிலவிலே தண்ணீர் இருப்பதைக் கண்டுதான் என்ன? தங்கம் இருப்பதைக் கண்டுதான் என்ன? நம் வீட்டுக் குழந்தைகளைப் பட்டினி போட்டு விட்டு உலக சாதனை செய்வதால் என்ன பயன்? அடுத்த மாநிலத்தில் வீணாகக் கடலில் கலக்கும் நீரை இந்த மாநிலத்திற்கு கொண்டு வந்து பயன்படுத்த நாதியில்லை. நிலவிலிருக்கும் தண்ணீரைக் கொண்டு வந்த எந்த நாட்டு பஞ்சம் தீர்க்கப் போகிறார்கள்.



இது குறித்து அருட்செல்வர் ஐயா அவர்கள் பல நாட்களாக பத்திரிக்கைகளில் எழுதி வருகிறார். இந்த மாதம் கூட

ஓம் சக்தி டிசம்பர்-2009 இதழில் இது குறித்து விளக்கமான ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அந்த மாமனிதருக்கு நம் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வோம்.


கங்கை காவிரி இணைப்பு குறித்து 1987ல் ஒரு கவிதை எழுதி, தபால் அட்டையில் அச்சிட்டு நண்பர்களுக்கெல்லாம் அனுப்பி வைத்தேன். அதை முன்பொரு பதிவில் இட்டிருந்தாலும், இங்கே மீண்டும் இடுவது பொருத்தமாக இருக்குமென்று பதிவிட்டிருக்கிறேன்.


கங்கை காவிரியாள்

இன்றில்லை என்றாலும்


இரு நூறு ஆண்டாயின் ....

கடலில் வீணாக

கடந்தேகும் கங்கைதனை

காவிரி பெண்ணோடு

கை கோர்க்க செயல் வேண்டும்.

எனவே எழுதுங்கள் ...

எப்போதும் பேசுங்கள் ...

உங்கள் பேச்சே

உங்கள் எழுத்தே

விதையாகி வித்தாகி

விரைந்து செயலாகட்டும்

விளைந்து வளம் பெருகட்டும்.

இன்றில்லை என்றாலும்

இரு நூறு ஆண்டாயின் . . .

Tuesday, December 15, 2009

கவலைக்கு மருந்து

நாம் அனைவருமே கடந்த காலத்தில் நடந்தவைகளையும் எதிர் காலத்தில்


செய்ய வேண்டியதையுமே என்நேரமும் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

நிகழ்காலம் என்ற அந்தக் கணத்தை நினைந்திருப்பது இல்லை. அதிலும்

இறந்த கலத்தில் நடந்த துன்ப நிகழ்வுகளையே நினைந்து துன்புறுவது

அதிகம். வாழ்வில் துன்ப நிகழ்வுகள் எப்போதேனும் நடப்பதை எப்பொழுதும்

நினைந்து துன்புற்று உயிராற்றலை செலவழிக்கிறோம். அதேபோல் எதிர்

காலத்தில் செய்ய வேண்டியதை எப்பொழுதும் நினைந்து துன்புறுவதும்

நடக்கிறது.



ஒரு செயலைச் செய்யும் போது முழு மனதையும் அச்செயலில் செலுத்தாமல்

இறந்த கால எதிர் கால நினைவுகளில் மனம் செல்வதால் அக்காரியம்

முழுமையுடையதாக இருப்பதில்லை.



இதையே கீதையில் பலனை எதிர்பாராது செயலில் கவனத்தை செலுத்து

என்கிறது. நாளைய தேர்வை நினைந்து கவலை கொள்ளாமல் இன்று

நன்றாகப் படி. நன்றாக தேர்வெழுது. தேர்வு முடிவு நன்றாக இருக்கும்

என்கிறது. அதே போல் என்றோ ஒருவர் நமக்கு செய்த தீங்கை எப்பொழுதும்

நினைந்து வெறுப்பை மனதில் வளர்த்துக் கொண்டிருப்போம். ஒரு வேளை

அவர்கூட மனம் திருந்தி நல்லவராகி இருக்கக்கூடும். அவரைப் பற்றி நமது

மனதில் கலங்கமாகவே நினைத்துக் கொண்டிருப்போம். பல நல்ல நண்பர்கள்

நமக்கு இருந்தாலும் ஒரு சில எதிர் கருத்துக் கொண்டோரையே அதிகமாக

நினைத்துக் கொண்டிருப்போம். இதனால் உங்கள் ஆழ்மனதில் எதிரிகளைப்

பற்றிய நினைவே அதிகமாகத் தேங்குகிறது.இவ்வாறான எதிரிகளை மறக்கவும்

நண்பர்களை அதிகமாக நினைந்து வழ்த்தவும் தவப்பயிற்சி அதிகம் உதவுகிறது.

நிகழ்காலத்தில் நிற்கும் பழக்கமும் வருகிறது. அப்புறமென்ன தவம் செய்தால்

கவலை காணாமல் போகிறது. சந்தோசம் தானாக வருகிறது.



கவிதை எழுதியபோது பின்னூட்டமிட்டவர்களெல்லாம். தவம் பற்றி

எழுத ஆரம்பித்ததும் பின்னங்கால் பிடரியில் பட ஓடிவிட்டார்கள்.

அந்த இனிய நண்பர்களுக்காகவும் நாலு கவிதை எழுதத்தான் வேணும்.

Sunday, December 13, 2009

சக்தி தொழில்நுட்பக் கல்லூரி

முன்னாள் மாணவர் கூட்டம்
20.12.2009 காலை
கல்லூரி வளாகத்தில் நடைபெறும்
அனைத்து முன்னாள் மாணவர்களையும்
அன்போடு அழைக்கிறோம்.

Thursday, December 10, 2009

எங்கே சந்தோசம்

ஒரு இலக்கை வைத்துக்கொள்ளுங்கள், அந்த இலக்கை அடைந்தவுடன் இன்னொரு இலக்கை வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையில் முன்னேற இதுவே வழி. என்கிறது மேலை நாட்டு தத்துவம்.
கிடைத்ததைக் கொண்டு சந்தோசம் கொள்ளாமல் சந்தோசத்தை தள்ளிப்போடுங்கள் என்கிறது.

நமது நாட்டிலே முன்பெல்லாம் எண்ணெய் ஆட்ட செக்கு இழுக்க மாடுகளை பயன்படுத்துவார்கள். அப்போது மாட்டின் கழுத்தில் உள்ள நுகத்தடியில் ஒரு குச்சியை வைத்துக் கட்டி மாட்டிற்கு முன்னாள் ஒரு இரண்டடி தூரத்தில் ஒரு புல் கட்டை தொங்க விடுவார்கள். அந்த புல் கட்டை சாப்பிட நினைத்து மாடு நகரும் போது அந்த புல் கட்டும் நகரும். இவ்வாறானதே இந்த தத்துவம்.

சரி, நமது நட்டு சித்தாந்தம் சொல்வதென்ன : இருப்பதைக் கொண்டு மன நிறைவுடன் வாழுங்கள், மன நிறைவு பெறும்போது உங்கள் உள்ளமும் உயிரும் உன்னத ஆற்றல் பெறுகிறது. அப்பொழுது நீங்கள் செய்யும் காரியங்கள் ஒரு நிறைவுடனும், தெளிவுடனும், மனிதாபி மானம் நிறைந்ததாகவும் இருக்கும் என்கிறது. இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழச் சொல்கிறது. அதனால் பொருள் இருப்பு / இல்லை என்பதும் அதை தேடும் வேலையும் அதன் போக்கில் நடத்துவோம் . ஆனால் ஒவ்வொரு கணமுமே எது இருக்கிறதோ அதை மன நிறைவுடன் துய்ப்போம் என்கிறது.

இப்பொழுது தெரிகிறதா மேலை நாட்டில் பொருள் வளம் படைத்திருந்தும். மன வளத்திற்கு கீழை நாட்டின் சித்தாந்தத்தை தேடுவதன் ரகசியம்.

பதிவர்கள், வாசிப்பவர்கள் சந்திப்பு

Tuesday, December 8, 2009

பதிவர்கள் சந்திப்பு

பூஜிய பரப்பாக
பூமியை மாற்றிவிட்ட
வலைதளத்திலே திலைத்து
வண்ண கலை காட்டும்
நண்பர்கள் கூட்டமொன்று
நடக்கிறது ஈரோட்டில்
பகுத்தறிவு பெரியாரின்
பண்பான நகருக்கு
அன்புடன் அழைக்கின்றோம்.
அவசியம் வந்திடுவீர்.
உங்கள் வருகையை
உன்னதமாய் நினைக்கின்றோம் .
இன்னும் விபரத்திற்கு
ஈரோடு கதிர் பக்கம்,
சொடுக்கி பாருங்கள்
சுழற்றி பேசுங்கள்.
நன்றி நண்பர்களே
வாழ்க வளமுடனே .

20.12.2009 ஞாயிறு மாலை ஒரு மூன்று மணி நேரம் ஈரோட்டில் பதிவர்கள் மற்றும் வாசிப்பாளர்கள் சங்கமமாக நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம். அனைவரும் எளிதில் கலந்து கொள்ளும் வகையில் ஞாயிறு மாலை 3.30 மணிக்குத் துவங்கி மாலை 7 மணிக்குள் முடிக்கத் திட்டமிட்டிருக்கிறோம்.சந்திப்பு நடைபெறும் இடம் :
பில்டர்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா ஹால் (ஏ/சி)
லோட்டஸ் ஷாப்பிங் சென்டர் பின்புறம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில்,
பெருந்துறை சாலை,ஈரோடு - 11


தயவுசெய்து பதிவர்கள் மற்றும் வாசிப்பாளர்கள் தங்கள் வருகையை முன் கூட்டியே இவர்களில் யாரிடமாவது உறுதி செய்துகொள்ளவும்.
வால்பையன் 99945-00540
ஈரோடு கதிர் 98427-86026
ஆரூரன் 98947-17185
பாலாசி 90037-05598

ராஜாஜெய்சிங் 95785-88925 (அகல்விளக்கு)