Sunday, November 29, 2009

சுழற்சி



சுக்கிலமும் சுரோணிதமும் -ஒரு
புள்ளியில் தான் சந்தித்தன.
பிறக்கையிலே இரண்டுகிலோ
பின்னெப்படி பெரிதானோம்.

மண்ணிலே விளையாத
மற்றேதும் உண்டதில்லை
மண்ணீரும் காற்றுவெப்பம்
விண்சேர்ந்து உண்டான

பொருளேதான் நாமுண்டு
பெரிதாக வளர்ந்து நிற்போம்.
பஞ்சபூத மல்லாது
வேறொன்றும் நாமல்ல .

இரத்தமும் சதயாக்கி
கொழுப்பாக்கி எழும்பாக்கி
மச்சையாக்கி மூலயாக்கி
சுக்கிலமும் சுரோணிதமும்

மற்றுமொரு பிறப்பாக்கும்
வேலையை செய்வது யார்.
பேராற்றல் ஒன்றுண்டு - அது
எங்கும் நிறைந்துண்டு.

மனிதஉடல் மரித்தபின்னே
மறுபடியும் மண்ணாகும்.
சுழற்சிதான் எல்லாவும்
அணுமுதல் அண்டம்வரை.

Thursday, November 26, 2009

ஜோதிடம் உண்மையா?


அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது என்கிறார்களே அது உண்மையா? ஆம் உண்மைதான்.
அது எப்படி? இந்த பிரபஞ்சமோ மிகப்பரந்த பெரும் பரப்பு அதிலே எண்ணற்ற நட்சத்திரமும் சூரியக் குடும்பங்களும் இருக்கின்றன. அவ்வளவையும் பிண்டத்தில் (நமது உடலில் ) இருக்க முடியுமா?
முடியும்.

எவ்வாரென்று ஆராய்வோம். பொருட்கள் எல்லாமே அணுக்களின் கூட்டு என்பது தெரியும். அணுக்கள் சுற்றுவதால் ஏற்படும் காந்தம் பிரபஞ்சமெங்கும் வான்காந்தமாகவும், உடலில் ஜீவா காந்தமாகவும் உள்ளது. உதாரணத்திற்கு சந்திரனிலிருந்து ஒரு செய்தி அனுப்புவதாக வைத்துக்கொள்வோம். அவை நேரே பூமியை வந்தடைவதில்லை. அது பிரபஞ்ச காந்த அலைகளினூடே பிரபஞ்ச வெளியெங்கும் பரவுகிறது. அந்த சங்கேதத்தை உள்வாங்கி நமக்கு புரியுமாறு விளக்கும் கருவிமூலம் நாம் அந்த செய்தியை அறிகிறோம். ஆக அச்செய்தி பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அணுக்களிநூடேயும் ஊடுருவிச் செல்கிறது.

இதுபோலவேதான் ஒவ்வொரு பொருளிளிருந்தும், ஒவ்வொரு கோள்களிலிருந்தும் அதனதன் இரசாயன தன்மைக்கேற்பவும், ஒவ்வொரு ஜீவனிலிருந்தும் அதன் இரசாயன மற்றும் எண்ணத்தின் தன்மைகளுக்கேற்பவும் ஒரு அலை வீசிக்கொண்டே இருக்கிறது. அவை பிரபஞ்ச அணுக்களிநூடே பரவிக்கொண்டே இருக்கிறது. இவ்வாறு இப் பிரபஞ்சத்தின் அனைத்துப் பொருட்கள், கோள்கள் மற்றும் ஜீவன்கள் அனைத்தின் தன்மைகளும் அனைத்து (ஒவ்வொரு) அணுக்களிலும் ஊடுருவிக்கொண்டே இருக்கிறது. அவ்வாறான அணுக்களின் கூட்டுத்தானே நமது உடல். எனவே அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது சரிதானே. (கீரை விதை அளவு உள்ள ஆல விதையில் ஆல மரத்தின் இல்லை, பூ, காய் விழுது போன்ற அனைத்து தன்மைகளும் பதிவாகி இருப்பதைப்போல
பெரிது சிறியதில் அடக்கமாக முடியும் )

ஜோதிடத்தில் கோள்களின் தாக்கம் பற்றி குறிப்பிடுவது, அந்த கோள்களின் இரசாயனத் தன்மையின் காந்த அலை நமக்கு ஒத்துக்கொள்ளுதலும் ஒவ்வாமையும் பற்றியே. அதற்கு பரிகாரமாக ஒரு சில கோவில்களுக்கு செல்லச்சொல்வதன் நோக்கம், அவிடத்தின் நிலம் மற்றும் நீரின் இரசாயனத் தன்மை நமது உடலின் இரசாயனத் தன்மையின் குறைபாடு / மிகுதியை சமப்படுத்தவே. ஆனால் 4000 பேர் குளிக்குமிடத்தில் 4,00,000 பேர் குளித்தால் நோய்தான் வரும். மூட நம்பிக்கையை தவிர்த்து விழிப்புடன் வாழுங்கள்.

Monday, November 23, 2009

தவம் என்றால் என்ன - V


மனத்தூய்மை :

மனதை எவ்வாறு தூய்மைப் படுத்துவது ? இந்தக் கேள்வியே தவறு . கருமையத்தை எவ்வாறு தூய்மைப் படுத்துவது என்பதே சரி . கருமையத்திலிருந்து எழும் அலைதானே மனம் . அதன் மலர்சிதானே எண்ணம் . கருமையத்தில் நமது அனுபவம் , நமது மூதாதையர் அனுபவங்கள் , ஏன் பரிணாமத்தில் நாம் பெற்ற அனுபவங்கள் எல்லாமே பதிவாக இருக்கிறது . அவைகள் தான் சூழ்நிலைகளுக்கேற்ப மனமாக / எண்ணமாக வெளிப்படுகிறது .


இப்பொழுது நீங்கள் படித்த ஆரம்ப பாடசாலையை நினைத்துக்கொள்ளுங்கள் . அப்போதைய ஆசிரியர் ஒருவரையும் நினைத்துக்கொள்ளுங்கள் . நினைவுக்கு வருகிறது அல்லவா ! உங்களுக்குள் அதன் பதிவு இல்லாமல் எப்படி நினைவுக்கு வரமுடியும் . இவனுடைய பேச்சு செயல் எல்லாமே இவனுடைய தாத்தாவை போலவே இருக்கிறது என்கிறார்களே ! எப்படி ? மூதாதையரின் அனுபவங்கள் எல்லாம் கருமூலமாக நம் கருமையதிற்கு வந்ததால்தான் .
பல பிறவிகளாக ,பல நாள் அனுபவங்களாக பதிவானவற்றை உடனே அழித்தலோ மாற்றுதலோ இயலாதுதான் . ஆனால் தொடர்ந்த இடைவிடாத பயிற்சியின் மூலம் கருமையத்தை தூய்மைப் படுத்த இயலும் .
நல்லதே எண்ணுதல் , நற்காரியங்கள் நடைபெற வேண்டும் என்று சங்கல்பம் செய்தல் , எல்லா உயிர்களும் சுபிட்சமாக வாழவேண்டும் என்று வாழ்த்துதல் , எதிரியும் மனம் திருந்தி நல்வாழ்வு வாழவேண்டும் என்று வாழ்த்துதல் இவ்வாறு கருமையம் தூய்மையடைய வேதாத்ரிய ( SKY -Simplified Kundalini Yoga http://www.vethathiri.org/ ) தவ முறையில் அற்புதமான பயிற்சிகள் வழங்குகிறார்கள் .
தினந்தோறும் சிறிது நேரம் இந்த பயிற்சிகள் செய்துவர நமது கருமையம் தூய்மையடைகிறது . அதை நமது மனதில் மலரும் எண்ணங்களில் ஏற்படும் மாற்றத்தைக் கொண்டே அறியலாம் .
ஞானியர்கள் இதுகுறித்து ஒரு கதை ஓன்று சொல்வதுண்டு . ஒரு குரு தன் சீடர்கள் இரண்டு பேரிடம் ஒரு குடத்தைக் காட்டி அதற்குள் என்ன இருக்கிறது என்றாராம் . ஒரு சீடர் ஒன்றுமில்லை என்றாராம் . இன்னொருவர் அதற்குள் காற்று இருக்கிறது என்றாராம் . குரு அந்தக்காற்றை வெளியே எடுக்க முடியுமா ? என்றாராம் , ஒரு சீடர் முடியாது என்றாராம் . மற்றொருவர் , முடியும் குருவே என்றாராம் . அப்படியானால் கற்றை வெளியே எடுபார்க்கலாம் என்றாராம் . அந்த சீடர் வேறொரு பானையில் தண்ணீர் கொண்டுவந்து அந்த பானை நிறைய ஊற்றி விட்டு , இப்பொழுது காற்றுமுழுவதையும் வெளியே எடுத்துவிட்டேன் என்றாராம் . இதன் கருத்து கருமையத்தில் நல்லதைப் போட்டால் அல்லாதது ஓடிவிடும் .
( நல்லதைப் போடுவோம் . . . .)

Saturday, November 21, 2009

தவம் என்றால் என்ன -IV



தவம் பற்றி ஆய்வதன் இடையே மனம் பற்றி கொஞ்சம் பார்ப்போம்.
மனதிலே திடீர் திடீரென்று ஒவ்வொரு எண்ணங்களும் வருகிறது . அது எங்கிருந்து வருகிறது ? எப்படி வருகிறது என்று நமக்குத் தெரிவதில்லை . ஒரு பொருளை நான்குபேர் பார்த்தால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எண்ணம் வருகிறது . ஒரு குதிரையைப் பார்க்கிறோம் . ஒருவருக்கு ஏறி சவ்வாரி செய்யவும் , ஒருவருக்கு அதன் அழகை ஓவியமாக வரையவும் , ஒருவருக்கு அதைப் பற்றி கவிதை எழுதவும் தோன்றுகிறது .

எண்ணம் எழ புறப் பொருளான குதிரை காரணமென்றல் எல்லோருக்கும் ஒரே எண்ணம் தான் வரவேண்டும் . ஆனால் வேறுவேறு எண்ணம் வரக் காரணம் என்ன ? நமக்குள் இருக்கும் ஏதோ ஒன்றுதான் எண்ணத்தை ஏற்படுத்துகிறது .

அது என்ன ? நாம் இதுவரை பார்த்தது , கேட்டது , சுவைத்தது நுகர்ந்தது , உணர்ந்தது மற்றும் நம் பெற்றோரின் அனுபவங்கள் ஆகியவை நம் உயிர் (கரு) மையத்தில் பதிவாகி இருக்கிறது . உயிர் மையத்திலிருந்து எழும் அலையே மனம் ஆகும் . மனதின் மலர்ச்சியே எண்ணமாகும் . அப்படி மலரும் எண்ணத்தில் மேற்படி பதிவுகளின் தன்மையனைத்தும் இருக்கும் .

ஏற்கனவே இருக்கும் பதிவுகளை தூண்டிவிடும் கருவியாக மட்டும் புறப்பொருள்கள் இருக்கின்றன. உள்ளே உள்ள பதிவுகள் நல்ல பதிவுகளாக இருந்தால் நல்ல எண்ணங்களும் . கெட்ட பதிவுகளாக இருந்தால் கெட்ட எண்ணங்களும் வரும் . இதையே “சட்டியில் உள்ளதே அகப்பையில் வரும் ” என்று பழமொழியாகக் கூறுவார் . சரி சட்டியில் உள்ள கெட்டதை நீக்கிவிட்டு நல்லதைப் எப்படிப் போடுவது ?

( ம்ம்ம் …. நாளைக்குப் போடலாம் ….)

Friday, November 20, 2009

தவம் என்றல் என்ன - III

இயமம் , நியமம்:
தவத்திற்கு அடிப்படையான ஆசனம் , பிரனாயாமத்தைப் போலவே இயமம், நியமமும் முக்கியமானதாகும் .

இயமம் என்பது தவிர்க்கப் பட வேண்டியது : அவை
1. பிற உயிர்களை துன்புறுத்தாமலிருத்தல்
2. பொய் பேசாமலிருத்தல்
3. பிறர் பொருளை அபகரிக்காமல் இருத்தல்
4. முறையற்ற பால்கவர்ச்சி கொள்ளாமலிருத்தல்
5. பிறர் பொருளை தாணமாகவும் பெறாமலிருத்தல்
ஆகிய ஐந்தும் ஆகும் .

நியமம் என்பது கைக்கொள்ள வேண்டியவை : அவை
1. மன மற்றும் உடலின் தூய்மை
2. நிறை மனம் அதாவது இருக்கின்ற சூழ்நிலையைக் கொண்டே மன நிறைவுடன் வாழ்தல்
3. உயர் வாழ்வு நெறிகளை (நேர்மை , தூய்மை , நல் அன்பு ) தேடிப் படித்தல் , கேட்டல்
4. உயர் வாழ்வு நெறிகளை வாழ்வின் நோக்கமாகக் கொள்ளுதல் ,
5. பிரபஞ்சப் பேராற்றலின்கன் நம்மை முழுமையாக ஒப்புவித்தல்
ஆகிய ஐந்தும் ஆகும் .

இவையெல்லாம் படிப்பதற்கு கடினமாகத் தோன்றினாலும் , கிடைத்தற்கரிய
இந்த மானுட பிறப்பை பயனுள்ளதாக்க எண்ணமிருப்பின் முறையான ஒரு குருவை நாடி வாரத்தில் ஒரு மணி நேர பயிற்சியும் மற்ற நாட்களில் வீட்டில் தினமும் ஒரு மணிநேர பயிற்சியும் மேற்கொண்டால் மிகவும் எளிதானதும் சந்தோசமானதும் தான் .
( இன்னும் சந்தோசிக்கலாம் .. .. .. )

Wednesday, November 18, 2009

தவம் என்றால் என்ன - II


யோகம்
யோகம் என்பது தவம் செய்ய ஏதுவான வகையில் உடலையும் உடலின் உள் அவயங்களையும் தயார் செய்யும் பயிற்சியே யோகம் ஆகும் . யோகத்தில் ஆசனம் , பிராணயாமம் முக்கியமானதாகும்.

ஆசனம் தவம் செய்ய நீண்ட நேரம் ஒரு நிலையில் அமரவேண்டும் . அவ்வாறு அமர்ந்திருக்கும்போது உடலின் எந்த இடத்திலும் உறுத்தலோ வலியோ ஏற்படக்கூடாது. அவ்வாறு உறுத்தலோ வலியோ ஏற்பட்டால் தவத்தில் முழு மனமும் லயிக்காது. தவம் செய்ய இடையூறு ஏற்படா வண்ணம் அமரும் முறையே ஆசனம் எனப்படுகிறது.

பிரணாயாமம் உடலின் மூல ஆற்றல் உடலெங்கும் 72000 நாடிகளின் வழியாக பரவுவதாக சித்தர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அவை மூலத்திலிருந்து மூன்றாகப் பிரிந்து, பின்பு அவை பலகிளைகளாக பிரிந்து ஆற்றலை உடலெங்கும் எடுத்துச் செல்கிறது . அந்த முக்கிய மூன்று நாடிகளை இடகலை, பிங்கலை, சுழுமுனை (இவற்றை சந்திர கலை, சூரிய கலை, சுசும்னா ) என்பர். இவை முதுகு தண்டில் முறையே இடது, வலது, நடு மையத்தில் கீழிருந்து மேலாக செல்கிறது. சாதாரணமாக நாம் முச்சு விடும்போது இடது நாசித்துவாரத்தின் மூலமோ அல்லது வலது நாசித்துவாரத்தின் மூலோமோ தான் காற்று செல்லும். இடது நாசித்துவாரத்தின் மூலம் காற்று செல்லும் போது மூல ஆற்றல் இடகலை நாடியின் மூலமும், வலது நாசித்துவாரத்தின் மூலம் காற்று செல்லும் போது மூல ஆற்றல் பிங்கலை நாடியின் மூலமும், இரண்டு நாசித்துவாரத்தின் மூலம் காற்று செல்லும் போது மூல ஆற்றல் சுழுமுனை நாடி வழியாகவும் உடலில் பரவுகிறது. ஆற்றல் சுழுமுனை நாடி வழியாக பரவும் போதுதான் நாளமில்லா சுரப்பிகள் நன்முறையில் செயல்பட்டு உடலில் (cosmic energy) வான் காந்த ஆற்றல் கிரகிக்கப் படுகிறது. இதற்காகவே நாடிசுத்தி, தண்டுவட சுத்தி ஆகிய பிராணாயாம பயிற்சிகள் அவசியமாகிறது.

Monday, November 16, 2009

தவம் என்றால் என்ன ?

தவம் என்றால் மனதை அடக்குதல். மன ஆற்றலை அதிகப்படுத்துதல் என்பது அல்ல. தவம் என்றால் இந்த பிரபஞ்சமும் இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிர்களும், உயிரற்ற பொருட்களும் உருவாக காரணமான மூல ஆற்றலை பற்றி விழிப்புணர்வு பெறுதலும் அவ்வாற்றலை வாழ்வில் பயன் படுதலுமே தவம் ஆகும்.

அந்த ஆற்றல் எங்கும் நிறைந்தே இருக்கிறது. நமக்குள்ளும் நம்மை சுற்றிலும் நிறைந்தே இருக்கிறது. அதை உணர்வதற்கு மனதை கடந்து செல்ல வேண்டும் . நாம் நுண்ணிய மனோ நிலைக்குச சென்று, பின் மனமே இல்லா நிலைக்கு அதாவது அப்பால் இருக்கும் பொருளை இப்பால் காட்டும் தூய கண்ணாடி போன்ற மனோநிலைக்கு செல்ல வேண்டும் .

கண், காது , மூக்கு , நாக்கு மற்றும் தோல் ஆகிய ஐந்து புலங்களில் ஒரு புலனின் செயல்பாட்டை குறைத்தால் மற்ற புலன்களின் ஆற்றல் அதிகமாகும் உதாரணத்திற்கு கண் பார்வை அற்றவர்களுக்கு கேட்க்கும் திறன் அதிகமாயிருப்பதைக்காணலாம் . தவம் செய்யும் பொழுது நாம் ஐந்து புலன்களின் சலனங்களை குறைத்து நுண்ணிய மனோநிலைக்கு செல்கிறோம். பின் மனமற்ற நிலைக்கு செல்லுகிறோம். (இதை வேதங்களில் மனோநாசம் என்றும் சொல்லுவார்கள்.) அப்பொழுது உள்ளுணர்வு விழிப்படைகிறது .

அங்கு நம்மிலும் நம்மைசுற்றிலும் எங்கும் நிறைந்திருக்கும் மூல ஆற்றலை உணர்கிறோம். எல்லாவற்றிற்கும் மூலமானது அந்த ஒரே ஆற்றல் என உணர்கிறோம். நாமும் அவ்வாற்றலே என உணர்கிறோம்.

தவத்தை கண்டிப்பாக ஒரு குருவின் உதவியுடனே கற்க வேண்டும். அவ்வாறன்றி தன்னிச்சையாகவோ நூல்களில் படித்தோ செய்யக்கூடாது . காரணம் நீங்கள் எதையாவது தவறாக செய்தால் பக்கவிளைவுகள் ஏற்படலாம். அவ்வாறு ஒருசிலர் தவறாக செய்துவிட்டு, யோகம் தவம் செய்ததால் எனக்கு இவ்வாறு ஆகிவிட்டது என்று பலரிடம் சொல்லி யோகம் தவத்தின் உன்னதம் மக்களிடம் பரவுவதில் ஒரு தடையை ஏற்படுத்தி விடுகிறார்கள். இவ்வாறு சிலர் தானும் கெட்டு பிறரையும் கெடுக்கும் நிலை ஏற்படுவதாலேயே குருவின்றி கற்றுக்கொள்ள கூடாது என்கின்றனர்.

Saturday, November 14, 2009

தவத்தால் என்ன கிடைக்கும்- II



எதுவும் கிடைக்கும். பணத்தாலும், படிப்பாலும் பதவியாலும் கிடைக்காத உன்னதங்கள் கூட தவத்தால் கிடைக்கும். இதை சின்ன உதாரணத்துடன் விளக்கினால் எளிதில் விளங்கிக்கொள்ளலாம்.


மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு வறுமையின் காரணமாக படிப்பை பாதியில் விட்ட மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் வகுத்த (வேதாத்ரியம் ) தியான முறையும், கோட்பாடுகளும் இன்று உலகில் பல்வேறுநாடுகளில் பல்வேறுமக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது.


கோவை பாரதியார் பல்கலைக் கழகம், தஞ்சை தமிழ் பல்கலைக் கழகம், மதுரை காமராஜர் பல்கலைக் கழகம், போன்ற பல்கலைக் கழகங்கள் எல்லாம் அவர் கற்றுக்கொடுத்த தியான முறைகளையும் அவர் எழுதிய நூல்களையும் வைத்து பட்டைய படிப்பு , இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளை தொடங்கி நடத்தி வருகிறது. தமிழக அரசு பள்ளிகளில் இவருடைய தியான முறைகளை கற்றுத்தர முயற்ச்சிகள் நடந்து கொண்டுள்ளது. ஐ.நா சபை இவரது பிறந்த நாளான ஆகஸ்ட் 14 ஆம் தேதியை உலக சமாதான நாளாக அறிவித்துள்ளது.


மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்த வறுமையில் வாடிய ஒருவரால் எப்படி இந்த அளவு உலகுக்கு பயனுள்ள யோகா முறைகளையும், விளக்கங்களையும் உருவாக்க முடிந்தது. பணத்தாலா? படிப்பாளா? பதவியாலா? இல்லை .தவம்... தவத்தால்... (மகான் வேதாத்திரி மகரிஷியின் இயக்கத்தைப்பற்றி மேலும் அறிய http://www.vethathiri.org/ தளத்தில் காணுங்கள் )

**********தவத்தால் என்ன கிடைக்கும்- I **************
எதுவும் கிடைக்கும். பணத்தாலும், படிப்பாலும் பதவியாலும் கிடைக்காத உன்னதங்கள் கூட தவத்தால் கிடைக்கும். இதை சின்ன உதாரணத்துடன் விளக்கினால் எளிதில் விளங்கிக்கொள்ளலாம்.

எழுதப்படிக்க தெரியாத, பணம், பதவி இல்லாத இராமகிருஷ்ணர்தான் உலகமே வியந்து திரும்பி பார்த்த விவேகானந்தரை உருவாக்கினார். அவ்வாறு உலகம் போற்றும் ஞானியை உருவாக்குமளவு ஞானம் அவருக்கு எங்கே இருந்து வந்தது? தவம், தவதாலேயே அது சாத்தியமாயிற்று.


நூறு ஆண்டுகளுக்கு முன்னரே (11.09.1893) உலக சர்வமத மாநாட்டில் உலகம் வியந்து போற்றுமளவு விவேகானந்தர் பேசியதன் சாராம்சம்தான் என்ன? உலகெங்கும் ஆறுகள் பல இடங்களில் தோன்றினாலும் அவையாவும் கடலையே சென்று அடைவதைப் போல் உலகெங்கும் உள்ள மதங்கள் யாவும் பல்வேறு இடங்களில் பல்வேறு கோட்பாடுகளுடன் விளங்கினாலும் அவையாவும் இறைவன் என்ற ஒரே பேராற்றலை அடைவதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளது. தத்தம் மதமே பெரிது என்ற எண்ணத்துடன் இருந்த உலக மக்கள் அனைவரும் மறுக்க முடியாத இறைப்பேராற்றளின் குரலாகவே இது ஒலித்தது. ( இன்றும் தன் மதமே பெரிது எனப் பேசுபவர்களை திருத்த பல விவேகானந்தர்கள் வேண்டும் )

பேராற்றளுடன் மதம் பற்றிய கருத்துக்களில் உலகையே உலுக்கிக் காட்டிய விவேகானந்தரும் அவரை உருவாகிய இராமகிருஷ்ண பரமகம்சரும் தவத்தாலே அவ்வாற்றலைப் பெற்றார்களேயன்றி பணத்தாலோ பதவியாலோ அல்ல.

( தவம் தொடரும்... )



Friday, November 13, 2009

மணமுடிக்க போவோற்கு

மணமுடித்து வாழுகின்ற
மக்களோ பலகோடி
மண்ணில்தான் நடக்கின்றார்
வானிலே பறப்பதில்லை

தேவ லோகத்து
தெவிட்டாத துணை வருமோ
கற்பனையில் கோட்டை கட்டி
காத்திருந்து மணமுடிக்க

எதார்த்தம் தண்டியொரு
எதிர்பார்ப்பு இருக்குமெனில்
உண்மை நிகழ்வுகளோ
உள்ளத்தை நெருடச் செய்யும்

மோகமது முப்பதுநாள்
ஆசையது அறுபதுநாள்
அதன் பின்னே வருவதெல்லாம்
அற்புதமாய் தோன்றது

என் காலில் நான் நிற்பேன்
உன் காலில் நீ நிற்பாய்
இணைந்து கைகோர்த்து
இனிமையாய் வாழ்ந்திடுவோம்

குறைகண்டு சுட்டினாலும்
நிறைகண்டு வாழ்த்திவிட
வாழ்க்கைத் தேர் அசையாமல்
வசந்தமாய் ஓடிவரும் .

யோகம் தவம் குறித்த எனது பதிவைக் காண இங்கே சொடுக்குங்கள்

Wednesday, November 11, 2009

ஓசோன்

ஏத்தளிறைக்க நிழல்
கிணத்தோரம் இரண்டு மரம் .
கலப்பை கட்டை வேணுமுன்னு
காட்டுக்குள்ளே நாலு மரம் .

மாடு கட்ட நிழல் வேண்டி
மறுபடியும் நாலு மரம் .
சாலையிலே அரசாங்கம்
சரமாக நட்ட மரம் .

ஊத்தெறைக்க பம்புசெட்டும்
உழவு செய்ய டேக்டரும்
நாலுவழிச் சாலை வந்து ,
நம்ம மரம் பாழாச்சு !

வாகனங்கள் பெருகியதில்
வரும் புகையும் கேடாச்சு !
ஓசோனில் ஓட்டயின்னா ...
சுற்றுச்சுழல் மாசு என்றால்...

தன் தலயில் மண்வாரி
தானே போட்டுக்கொண்டோம் !
இந்நிலையை மாற்றுதற்கு
எவரேனும் முயல்வாரோ ?

ஒரு பின்னூட்டத்தின் பதில்

Anonymous Said
ஏனய்யா, திருப்பி திருப்பி கவிதை எழுதியோ
அல்லது ஊருக்கு உபதேசம் செய்தோ வாழ்க்கையை கடத்திக்கொண்டிருக்கும் உங்களை போன்றவர்களுக்கு
போர் அடிக்காதா?

பின்னூட்ட மிட்டவற்கு
பிரியமுடன் நன்றி சொல்வேன் .
எழுதுவதன் காரணம்தான்
என்னவென்று யோசிக்கவும் .

விளைவுகளின் பயன்குறித்து
விமர்சனம் பண்ணிடவும்
நல்லதோர் வாய்ப்பளித்த
நண்பர்க்கு நன்றி சொல்வேன்

பதின்மர் வயதினிலே
படித்திருந்தால் நான்கூட
இப்படித்தான் கேட்டிருப்பேன்
இறுமாப்பாய் ஒரு கேள்வி .

காதலும் காமமும்
கவர்ந்திழுக்கும் வயதினிலே
மற்றெல்லாம் வீனேன்று
மனம் நினைக்கும் அது உண்மை .

அம்மணமே அற்புதமாய்
அறிவிலே நிறைந்திருக்க
அதற்கு நிகர் ஏதுமில்லை
என நினைத்தேன் அது உண்மை .

தொடு உணர்வே உயிரென்று
துடித்த செல்கள் தேகமெங்கும்
நித்தியமாய் இருக்குமென
நினைத்திருந்தேன் ஒரு சமயம் .

நாட்கள் நகர்ந்து சென்று
நித்தியம் நிறமிழந்தபோது
சாசுவதம் எல்லாம்
சாதாரமாய் ஆக ...

அனைத்தையும் தாண்டிய
அசாதாரண மொன்று
எங்கோ இருக்குமென
என்னுள்ளே தோன்றியது .

தேடும் மார்க்கத்தை
துரிதமாக்கி விட்டேன் . - அது
மனதை துய்மையாக்கவேண்டும்
மற்றவரை மதித்துநடக்கவேண்டும்

எல்லோருக்கும் நல்லதே நினைக்கவேண்டும்
எதிரியையும் வாழ்த்தும் நிலை வேண்டும்
இப்படி நிறைய .... வேண்டும்களை - என்னுள்
போட்டுவிட்டுப் போய்விட்டது .

இந்த வானம் ஒரு
கூரையாய் தெரியும்
உலகின் சுபிட்சமே
உயிர் மூச்சாய் இருக்கும்

அலுத்துப் போகாத
அற்புத நிலையான
உண்ணதத்தை தேடும்
உயர்வான மார்க்கமிது .

இது ஒரு சுகம்
இணையற்ற சுகம்
அப்புறமேன் அலுத்துப் போகிறது ?

உங்களில் மனிதமிருந்தால்
நீங்களும் ஒரு நாள்
இங்கே நகர்வீர்கள் . . .

Monday, November 9, 2009

வாழ்க்கை




உழைத்துண்டு உறங்கி
உறவுகொண்டு பெற்று
வளர்த்து மணமுடித்து
வழ்க்கைஎது என்றால்

எதுவுமில்லை சும்மா -வெறும்
சுழற்சிஎனத் தோன்றும்
எதற்கிந்த சுழற்சி
யார்செயும் வேலை ?

இயற்க்கைஎனு மாற்றல்
இயல்பூக்கம் கொண்ட
பரிணாமம் என்றே
பலபேர்கள் சொல்வர் .

ஆற்றல்களம் அமுங்கி
அண்டவெளி யாச்சு
அதிலே உயிர் தோன்றி
ஆறரிவுமச்சு.

ஆறறிவின் மேலே ஓரறிவு உண்டா?
தவமிருந்து மனிதன் - அவ்
வாற்றளுணர் செயலே
பெரும்சுழற்சி மீண்டும்
பூரணமாய் ஆகும் .

பூரணத்தை உணர்ந்தோன்
பரிணாம முற்றாம்
அகுதிலார் எல்லாம்
பிழைத்தோரே யன்றி
வழ்ந்தோராய் ஆகார் .

Sunday, November 8, 2009

புத்தகம்




நல்லதை எடுத்துக்கொண்டு
அல்லாததை விட்டுவிட
சுத்தமாய் சுதந்திரத்தை
என்னிடத்தே விடுகின்றாய்

வற்புறுத்தித் திணிக்காமல்
வேண்டுவற்கே விசயம்சொல்வாய் .
எதுவேண்டுமோ எடுத்துக்கொள்ளென்று
ஏகாந்தமாகவே இருக்கின்றாய் .

எப்போது வேண்டுமோ பார்த்துக்கொள்ளென்று
யுகாந்திரமாய் காத்திருப்பாய்.
வாழ்ந்தவனும் வீழ்ந்தவனும்
உன்னுள்ளே தானடக்கம் .

வாழவழி தேடுவற்கும்
வழிஉன்னுள் தானிருக்கும் .
உலகத்து அறிவெல்லாம்
உன்னுள்ளே தவமிருக்கும் .

சமுதாய புரட்சியை நீ
சப்தமின்றி யேசமைப்பாய்.
உன்சொல் கேட்பவற்கே
உயர்வுண்டு வாழ்க்கையிலே .

உண்மையாய் அணுகுவோரை
உத்தமனாய் ஆக்கிடுவாய் .
சகவாசம் கொண்டவரை
சான்றோனாய் ஆக்கிடுவாய்

Wednesday, November 4, 2009

சோமாலியா




உணவின்றி ஒருகூட்டம் வாடுவதும் - அவர்
இரத்தத்தை உறிஞ்சி சிலர் வாழுவதும்
என்னேநம் மானிடத்தின் ஜீவிதங்கள்
மனமிறங்கா கல்நெஞ்சக் காவியங்கள்

இயற்கைவளம் நிறைந்திருக்கும் நாடுஅது
இளைத்திருப்போர் வாழ்ந்திருக்கும் காடுஅது
கொழுத்திருக்கும் கூட்டத்தார் அங்குசென்றே
இளைத்தாரை கசக்கிநல்ல பொருள்கொனர்வார்

பழங்குடிகள் வாழுகின்ற நாட்டினிலே - சிலர்
காப்பானைப் போலநல்ல வேடமிட்டே
களவாடும் கூட்டத்தார் கண்டீரோ - பலர்
உணவின்றி உயிர்துறத்தல் கேட்டீரோ

அறிவியலில் உயர்ந்தமென மார்தட்டி
அக்கம்பக்கம் சாவவர்மேல் நடந்துசெல்லும்
இழிநிலையை மனிதமென கொள்ளுவதோ !
இரங்கியொரு துணைசெய்ய வேண்டாமோ ?

Monday, November 2, 2009

குழந்தை



பிஞ்சுக்கால்களில் நெஞ்சில் உதைத்ததும்
கொஞ்சிக்குலாவையில் மண்டு வைத்ததும்
குதிரைநாநென முதுகில் அமர்ந்ததும்
குழலும்யாழுமாய் குழரிப்பேசளும்
பொக்கைசிரிப்பிலே உள்ளம் ஈர்த்ததும்
மெல்ல நடக்கையில் இடறி விழுந்ததும்
எத்தனை எத்தனை இன்பம் கண்டேன் - உன்
ஒவ்வொரு அசைவிலும் திலைத்திருந்தே.

Sunday, November 1, 2009

மதம்



எல்லோரும் இறைஞானம் பெறவேண்டும் என்றே
ஞானியர்கள் தோற்றுவித்த கோட்பாடே மதமாம்
எசுபுத்தர் முகம்மது போன்றோர்க ளெல்லாம்
தான்பெற்ற இறைஞானம் உலகம் பெறவேண்டி...

தத்தமது கோட்பாட்டை உலகுக்கு அளிக்க
தனித்தனியாய் மதமென்று வளர்ந்து வரலாச்சு
சாரத்தை விட்டுவிட்டே பின்வந்த சோதர்
சடங்கைமட்டும் வைத்துக்கொள்ள சச்சரவு ஆச்சு

ஆறெல்லாம் ஓடிவரும் கடல்தனை நோக்கி
மதமெல்லாம் இறையுனர்த்தும் அறியாமை போக்கி
இவ்வுண்மை உணராதோர் மதம் சார்ந்தேனேன்று
வன்முறையை கட்டவிழ்த்து மனிதத்தை கொல்வார்.

பாலையிலே வளர்ந்த மதம் தாவரத்தைக் காணா
சமவெளியில் வளர்ந்த மதம் மாமிசத்தை உண்ணா
இப்படித்தான் மதங்களிலே வேறுபாடு உண்டாம்
என்மதமே பெரிதுஎன கூச்சலிடும் மூடா...

அறியாத குழந்தைக்கு அகரமுத லெழுத்து
அதுபோலே வந்ததுவே கோவில்குல பூஜை
கற்றறிந்த சான்றோர்கள் கவியியற்றல் போலே
யோகம்தவம் செய்துயிறை உணர்வுபெற வேண்டும்

எல்லோரும் ஒர்குலமே என்றுணர வேண்டும்
ஓருலக கூட்டாட்சி தான்மலர வேண்டும்
இராணுவத்துச் செலவினங்கள் தேவையில்லா நிலையில்
மக்கள்நலம் பேணுதலில் சொர்க்கமிங்கே காண்போம்.